Monday, April 12, 2010

மலையும் மலை சார்ந்த இடமும்

தேகத்தில்
பசுமை போர்த்திய
மலைமகள், தன்
வளமை விளங்க
மேகத்தில்
நனைந்து நின்றாள்

ஆடை விலகிய
வனங்களில்,
துளிர்த்த நீர்த்துளிகள்
அருவியென விழுந்து
மேனியில்,
ஓடையென ஓடியது

தலைமகன்,
கதிரவன் தன்
மோகத்தில் முளைத்த
ஆயிரம் கிரணங்கள்
அனைத்தும் கொண்டு
அணைத்து கொண்டான்

பூ மனம் மலர்ந்தது
நறுமணம் கமழ்ந்தது
தளிருடல் சிலிர்த்தது
இன்னிசை இசைத்தது
உள்ளுயிர் விழித்தது

நித்ய புதியவர்கள்
அனுதினமும் அன்பு
செய்யும் குறிஞ்சி